செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வித்யாசாகர் கல்விக்குழும தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் இயக்குநர் பி.ஜி.ஆச்சாரியா, கல்லூரி முதல்வர் ஷாலினி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்விக் குழுமத்தின் பொருளாளர் சுரேஷ் கங்காரியா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் உடற்பயிற்சியாளர் அ.உஷாமேரி ஆண்டறிக்கை வாசித்தார்.
காமன்வெல்த் நடுவரும், தேசிய தடகள வீரருமான டி.சந்திரபோஸ் விழாவைத் தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவியருக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் டி.சந்திரபோஸ் வழங்கினார்.
மேலும், விளையாட்டுத்துறையில் சாதித்த 10 மாணவியருக்கு கல்விக் கட்டண சலுகைகளை வழங்கி, அவர் சிறப்புரையாற்றினார். தனிநபர் வெற்றிக் கேடயத்தை வணிக நிர்வாகவியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி பி.சுசித்ரா வென்றார். ஒட்டுமொத்த வெற்றிக் கேடயத்தை வணிகவியல் துறை வென்றது.