நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனத்தை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற நுண்ணுயிர் கிருமியினால் உண்டாகும் காசநோய், காற்றின் மூலம் பரவும் கொடிய நோயாக உள்ளது. இந்நோயின் தாக்கம் உடையோர் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர்.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்நோயை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிநவீன காசநோய் கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட வாகனம், ஹெச்ஐவி பரிசோதனை செய்யும் வாகனம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் பா.பொன்னையா கொடியசைத்து வாகனப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியது: இந்த வாகனத்தில் மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவக் குழுவினர் இருப்பார்கள். இந்த வாகனம், திங்கள்கிழமை காஞ்சிபுரம், குன்னவாக்கம், தேவரியம்பாக்கத்தில் தொடங்கி, தொடர்ந்து பிப். 16 -ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வலம் வர உள்ளது.
அப்போது, பரிசோதனை மூலம் காசநோய், ஹெச்ஐவி நோய் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வாகனம் பிப்.12 -இல் பல்நெல்லூர், மாம்பாக்கம், கொல்லச்சேரி, தர்காஸிலும், 13- இல் திரிசூலம், பல்லாவரம், திருநீர்மலையிலும், 14- இல் ரெட்டிப்பாளையம், ராயமங்கலம், முள்ளிப்பாக்கத்திலும், 15- இல் சதுரங்கப்பட்டினம், செய்யூர், சூனாம்பேட்டிலும், 16- இல் காந்திநகர், செம்பூண்டி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் மிகக் குறைவான நேரத்தில் காசநோய், ஹெச்ஐவி, நோய் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, காசநோய் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன காசநோய் கண்டறியும் கருவியை மாவட்ட சுகாதார இணை இயக்குநருக்கு ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவர்கள் மதன்குமார், சந்தோஷ், மாவட்ட காசநோய் மைய ஊழியர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.