செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள் பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் திங்கள்கிழமை நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் இரு படுக்கைகள் எரிந்து சேதமடைந்தன.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு உள்ளகப் பயிற்சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள அறைகளில் இருக்கும் பயிற்சி மருத்துவர்கள் திங்கள்கிழமை வழக்கம் போல் பணிக்குச் சென்றனர். அப்போது ஒரு அறையை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றபோது, அறைக்குள் இருந்து புகை வந்தது. உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் அந்த அறையில் பரவிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அறையில் இருந்த இரு படுக்கைகள் எரிந்து சேதமடைந்திருந்தன.
மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் தீ விபத்து ஏற்பட்ட அறையைப் பார்வையிட்டனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.