அரசு பொதுத் தேர்வை எழுதும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பாக ஞானபீடத்தில் வரும் 19ஆம் தேதி சிறப்பு வேள்வி பூஜை நடைபெற உள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும், 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறவும், முழு தேர்ச்சி பெறவும் வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு வேள்வி பூஜை வரும் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ஞானபீடத்தில் நடைபெற உள்ளது.
இந்த பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன் தொடங்கி வைக்கிறார். இயக்க மாணவர் அணிச் செயலர் அ.அகத்தியன் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.