வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு குறித்த விழிப்புணர்வு முகாம் மணிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், இத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், வாக்காளர் எந்த சின்னத்துக்கு வாக்களித்தார் என்பதை உறுதிப்படுத்தும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.
வாக்குப் பதிவு செய்ததும், இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில், வாக்கு பெற்ற வேட்பாளர் வரிசை எண், பெயர், வேட்பாளரின் சின்னம் ஆகியவை அடங்கிய அச்சிட்ட தாளை, வாக்காளர் 7 வினாடிகள் வரை காண முடியும்.
இந்த இயந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள 344 வாக்குச் சாவடி மையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வை வருவாய்த் துறை அலுவலர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் மணிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.