சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்துக்கு அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி வெள்ளிக்கிழமை வருகை தந்து அங்குள்ள புராதன சிற்பங்களைப் பார்வையிட்டு கண்டுகளித்தார்.
அவருக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் மலர்க் கொத்து அளித்து வரவேற்றார். தொல்லியல் துறை அலுவலர் பரணிதரன் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது வடிக்கப்பட்ட ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், குடவரை மண்டபங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ரசித்தார்.
மாமல்லபுரம் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆளுநருக்கு விளக்கினர். ஆளுநர் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.