மாமல்லபுரத்தில் உள்ள நவநீதகிருஷ்ணர் கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பஜனை உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது .
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை உற்சவத்தை பஜனை மண்டலி குழுவினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, அவர்கள் நாள்தோறும் அதிகாலை வேளையில் கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பஜனைப் பாடல்களைப் பாடியபடி செல்கின்றனர். இக்கோயிலில் மார்கழி மாதத்தின் 27-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி நவநீதகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். அவருடன் மாமல்லபுரம் நகர வீதிகளில் திருப்பாவை பாடல்களைப் பாடியபடி பஜனை மண்டலி குழுவினர் வந்தனர்.