மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 740 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உழவர் திருநாளை முன்னிட்டு, அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மணிமங்கலம் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில், படப்பையை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மதுக் கடை அருகே, அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சத்யா (25), சிவகுமார்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 180 மில்லி லிட்டர் அளவுகொண்ட 720 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர் பகுதியில் மதுபானம் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.