காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 11 அரசு நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 158 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், 11 அரசு நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் அங்கன்வாடி மைய குழந்தைகள் மட்டுமின்றி மூன்றரை வயது நிறைவடைந்த குழந்தைகள் எல்கேஜி வகுப்புகளிலும், நான்கரை வயது நிறைவடைந்த குழந்தைகள் யுகேஜி வகுப்புகளிலும் சேர்க்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கூத்தவாக்கம், ஏகனாபுரம் மற்றும் எறையூர் பள்ளியிலும், குன்றத்தூர் ஒன்றியத்தில் மதனந்தபுரம், கொழுமுனிவாக்கம், கோவூர் ஊராட்சிக்குள்பட்ட புதுவட்டாரம், சிக்கராயபுரம், சாலமங்கலம், பழந்தண்டலம், எழிச்சூர், பரணிபுத்தூர்ஆகிய 8 பள்ளிகளிலும் இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கூத்தவாக்கம் பகுதியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் சேர வந்த மாணவர்களை காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன், வட்டாரக் கல்வி அலுவலர் காஞ்சனா, கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, பள்ளித் தலைமையாசிரியர் கௌரீஸ்வரி ஆகியோர் இனிப்புகள் வழங்கி மாணவர்களையும், பெற்றோரையும் வரவேற்றனர்.