காணும் பொங்கல் தினத்தில் மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கித் தவித்தவர்களை மீட்ட மீனவர்களுக்கு மாமல்லபுரம் காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் காணும் பொங்கலின்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி பலர் கடலில் இறங்கி நின்றனர். இந்நிலையில், அவசரக் காலத்தில் உதவும் வகையில் ரோந்துப் படகுகளுடன் மீனவர்கள் சிலர் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடல் அலையில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை கவச உடை அணிந்த மீனவர்கள் காப்பாற்றினர்.
இதனால் காணும் பொங்கலின்போது கடலில் குளிக்கச் சென்றவர்களின் உயிரிழப்பு இம்முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இச்சேவையில் ஈடுபட்ட மீனவர்களை மாமல்லபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பாராஜ், ஆய்வாளர் ரவிக்குமார், திருக்கழுகுன்றம் மதுவிலக்கு ஆய்வாளர் சிரஞ்சீவி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.