மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியுடன் கூடிய திறன் விழிப்புணர்வு முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜூலை 15-ஆம் தேதி உலக இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை திறன் விழிப்புணர்வு, வாழ்க்கை தொழில் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடுமாறு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவசப் பயிற்சியுடன் கூடிய திறன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திறன் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வாசு தொடங்கிவைத்தார். இதில் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.