மதுராந்தகம் அருகே சாலை தரமற்ற வகையில் அமைக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுபேர்பாண்டி ஊராட்சி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தொழுபேடு- ஒரத்தி நெடுஞ்சாலையில் எடையாளம் கிராமத்துக்கு அருகில் உள்ள இந்த ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. குண்டும் குழியுமாக மாறி விட்ட இச்சாலையை சீரமைக்குமாறு இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன் இச்சாலை சீரமைக்கப்பட்டதாம். எனினும், தரமற்றும், சாலையின் இரு பக்கமும் மண் சேர்ப்பு இல்லாமலும் சாலை போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் விவரங்களும் அறிவிப்புப் பலகையில் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தரமற்ற வகையில் சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து எடையாளம் கூட்டுச் சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும் - பெண்களும் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்னை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.