ஸ்ரீபெரும்புதூரில் பராமரிப்பு இல்லாமல் மாசடைந்திருந்த திருங்கை ஆழ்வார் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வார்டு பகுதியில் திருமங்கை ஆழ்வார் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை குடிநீராக பயன்பட்டு வந்த திருமங்கை ஆழ்வார் குளத்தின் நீர், போதிய பராமரிப்பு இல்லாததால் மாசடைந்தது. இதையடுத்து, திருமங்கை ஆழ்வார் குளத்தைத் தூர்வாரி
சீரமைக்க தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்தது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்துக்கு கோயில் நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். இந்நிலையில், அனுமதி பெற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் குளம் தூர்வாரப்படவில்லை.
இதுகுறித்து ஜூலை 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தினமணி நாளிதழில் கிடப்பில் போடப்பட்ட திருமங்கை ஆழ்வார் குளம் தூர்வாரும் பணி' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குளத்தைத் தூர்வாரும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.