செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு காந்தி சாலை மேட்டுத்தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட சந்நிதிகளில் ஸ்ரீ ரங்கநாத சுவாமி, தாயார் ஸ்ரீரங்கநாயகி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், ராமாநுஜர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தொடர்ந்து, புதன்கிழமை பிம்ப ஸ்தாபனம், பகவத் பிரார்த்தனை, ஆசார்ய வர்ணம், புண்யாஹ வாசனம், அங்குரார்ப்பணம், கலாகர்ஷணம், வாஸ்து சாந்தி, அக்னிப் பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை கும்பம் புறப்பாடு, கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.