மாமல்லபுரம் அருள்மிகு மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷ பூர்த்தி விழாவையொட்டி, சிறப்புப் பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மாமல்லபுரம் பஜனைக்கோயில் தெருவில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2-ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை காலை சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கலசபூஜை, சக்தி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. பெண் சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை வாசித்தனர்.
விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள், மல்லிகேஸ்வரர் பிரதோஷக் கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.