மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் இறந்த முதியவரின் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பாடசாலைத் தெருவைச் சேர்ந்தவர் ராதா (70). இவர் சனிக்கிழமை மயங்கி விழுந்ததால், அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அவரை மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனிடையே, முதியவர் இயற்கையாக மரணமடையவில்லை, அவர் தூக்குப் போட்டு இறந்துள்ளார் என்று சிலர் மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, பூஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.