விலையில்லா மடிக் கணினி வழங்க வலியுறுத்தி படப்பை அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் வாலாஜாபாத்-வண்டலூர் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
படப்பை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகளை வழங்க பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை அறிந்த முன்னாள் மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு முதலில் மடிக் கணினிகளை வழங்கி விட்டு, பின்னர் நிகழாண்டு மாணவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் அளித்த பதில் திருப்தி அளிக்காத நிலையில், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, விலையில்லா மடிக் கணினிகளை தங்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வாலாஜாபாத்-வண்டலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீஸார், முன்னாள் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.