கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குடைகளுடன் சென்று மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு ரசித்தனர்.
மாமல்லபுரத்தில் கடந்த ஒருசில தினங்களாக மாலை நேரத்தில் சுமார் அரைமணிநேரம் மழைபெய்து வந்தது. திங்கள் கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. மாலையில் கனமழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குடைகளுடன் சென்று சிற்பங்களை கண்டு களித்தனர்.
இதனால் மாமல்லபுரத்தில் குடைகளும், தொப்பிகளும் அதிகம் விற்பனையாகின. ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல அச்சப்பட்டு திரும்பிச் சென்றனர்.
தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.