அத்திவரதர் பெருவிழாவின் 25-ஆவது நாளான வியாழக்கிழமை கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உள்பட 4 பேர் மயக்கமடைந்து சிகிச்சை பெற்றனர்.
அத்திவரதரை தரிசிக்க கடந்த இரு நாள்களை விட வியாழக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த காவலர் சுந்தர்ராஜ் (31)திடீரென மயக்கமடைந்தார். அவருக்கு கோயில் வளாகத்திலிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது.
பொது தரிசனப் பாதையில் வந்து கொண்டிருந்த காஞ்சிபுரம் அருகேயுள்ள வஞ்சிப்பேட்டை பெரியதெருவைச் சேர்ந்த விஜயகுமார் (61), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ்வரன் (48) ஆகியோரும் மயங்கி விழுந்தனர்.
அதேபோல், சுவாமியை தரிசனம் செய்த பிறகு காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையைச் சேர்ந்த கண்ணம்மாளும் (60) மயக்கம் அடைந்தார். இவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.
நன்கொடையாளர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் அனுமதியில்லை: அத்திவரதர் பெருவிழா தொடர்பாக நன்கொடை அளித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இவர்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கென கொடுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6 மணிக்கு மேல் வந்த பலரும் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன் உரிய நேரத்தில் வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இணையத்தில் சுவாமி தரிசனத்திற்காக முன்பதிவு செய்தவர்கள் மாலை 6 மணி முதல் 9 மணி வரை அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நேரத்தில் வந்து தரிசனம் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.