மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் 48-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் 2-ஆம் தேதி காலை மங்கல இசையுடன் தொடங்குகிறது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். அதிகாலை 3 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு சித்தர் பீடத்துக்கு வருகை தரும் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சித்தர் பீட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு கலச, விளக்கு, வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு பங்காரு அடிகளார் இல்லத்தில் இருந்து லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், தாய்வீட்டு சீர்வரிசை மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் தொடங்குகிறது.
அவர்களுக்கு ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் வரவேற்பு அளிக்கிறார். சித்தர்பீடம் வந்த இக்குழுவினர் ஆதிபராசக்தியை வணங்கி, சித்தர்பீடத்துக்கு எதிர்திசையில் உள்ள குளக்கரையில் கஞ்சி வார்க்கும் இடத்தில் சேர்த்து விடுவர். வரிசையில் வரும் பக்தர்களுக்கான கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து கருவறை அருகில் உள்ள சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்ச்சியை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
கஞ்சி கலயம், தீச்சட்டி ஏந்தி வருதல் மற்றும் பாலாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வரிசையில் வந்து அம்மனை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பாலாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும்.