மதுராந்தகத்தை அடுத்த பழையனூரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழையனூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.வாசுதேவன், ராஜா, சேகர், ராமமூர்த்தி, கஜபதி உள்ளிட்டோரும் பழையனூர் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காகித ஆலைக்குச் செல்லும் குடிநீரில் ஒருபகுதியை வழங்கக் கோரி பொதுமக்கள் கோஷமிட்டனர்.
தகவலை அறிந்து வந்த மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் (பொறுப்பு) ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சனிக்கிழமை (ஜூன் 1) முதல் வாகனங்களின் மூலம் குடிநீர் தற்காலிகமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். காகித ஆலைக்குச் செல்லும் குடிநீரில் ஒருபகுதியை வழங்குவது குறித்து ஆலை நிர்வாகிகளிடம் பேசித் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.