உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வளம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை, தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீதரன், மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் திட்ட இயக்குநர் கீதாஞ்சலி, பேரூராட்சிகள் துணை இயக்குநர் சாந்தகுமார் ஆகியோர், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்தும், நாம் வாழும் பகுதியைத் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் விளக்கி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகளை அகற்றினர். சுற்றுச் சூழல் துறை உதவி திட்ட இயக்குநர் ஈஸ்வரன், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஆலோசகர் மகேஷ் ரானா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.