சோமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இருவரை சோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
சோமங்கலம் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ரபீக் (29), குரோம்பேட்டையைச் சேர்ந்த சேகர் (29) என்பதும், இவர்கள் இருவரும் வண்டலூர்- வெளிவட்டச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சோமங்கலம் போலீஸார் அவர்களிடம் இருந்து 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.