திருக்கழுகுன்றம் பரமசிவம் நகரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு உள்பட்ட பரமசிவம் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லை என்றும், கூடுதல் வகுப்பறைகள் தேவை என்றும் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக்கோரிக்கையை அரசு ஏற்று, புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.46.5 லட்சம் நிதி ஒதுக்கியது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கி, நிறைவடைந்து திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து, புதிய பள்ளிக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
அப்போது, அதிமுக மாவட்டச் செயலரும், பெற்றோர்-ஆசிரியர் கழகச் செயலருமான எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி , ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஏழுமலை, பள்ளி தலைமை ஆசிரியர் ஃபியூலா தங்கம், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் வேலாயுதம், வழக்குரைஞர் வரதராஜன், காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன், உதவி ஆய்வாளர்கள் அசோக் சக்கரவர்த்தி, வெங்கடேசன், கட்சி நிர்வாகிகள் தினேஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.