மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி கலந்துகொண்டு 7பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 28-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது.
சார்- ஆட்சியர் தங்கவேல் தலைமையில், வட்டாட்சியர் ஜெயசித்ரா, துணை வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த ஜமாபந்தியின் 10-ஆம் நாளில் மதுராந்தகம், மாம்பாக்கம், மாரிபுத்தூர் உள்ளிட்ட கிராமத்தினர் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 251 மனுக்களை அளித்தனர். இதில் 7 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி கலந்துகொண்டு 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார். இதர மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஜூன் 18 வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.