மாமல்லபுரத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடலோரப் பகுதியில் உள்ள உணவு விடுதி உரிமையாளர்கள் அச்சத்தில் ஆழந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் கடலோரப் பகுதிகளில் பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டு உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் பல செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இதுபோன்று கடலோரம் உள்ள விடுதிகளில் உணவருந்தி, அங்கேயே தங்குவதை விரும்புகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது.
அனல் காற்றும், கடல் கொந்தளிப்பும் ஒருசேர ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கிக் குளிக்க அஞ்சியபடி கரையில் நின்றிருந்தனர். மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கும்மேல் எழுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், கடலோரப் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் உணவு விடுதி உரிமையாளர்கள் தங்கள் கட்டடத்துக்கு சேதம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கட்டட உரிமையாளர்கள் கூறியது:
சனிக்கிழமை மாலை 7 மணிக்குமேல் கடல் கொந்தளிப்பு அதிகரித்தது. ராட்சத அலைகள் எழும்பி, கரையோர மணலை அரித்துச் சென்றன. இதனால் கடலோரத்தில் உள்ள கட்டடங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.