உலக இசை தினம்: அரசு இசைப்பள்ளியில் நாளை போட்டிகள் தொடக்கம்
By DIN | Published On : 18th June 2019 04:10 AM | Last Updated : 18th June 2019 04:10 AM | அ+அ அ- |

உலக இசை தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் புதன்கிழமை (ஜூன் 19) இசைப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.
தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர், சட்டப் பேரவையில் கடந்த மானியக் கோரிக்கையின்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டார். உலக இசை தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் இசை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.
அதன்படி, உலக இசை தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள் வரும் 19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளன. இந்த இசைப் போட்டிகள் 15 வயது முதல் 30 வயது வரையில் உள்ளவர்களுக்கு நான்கு பிரிவுகளில் நடத்தப்படும். தமிழிசை, கிராமியப் பாடல், முதன்மைக் கருவி இசை (வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், சாக்ஸபோன், கிளாரினெட், கோட்டுவாத்தியம், மாண்டலின் போன்றவை), தாளக்கருவி இசைப் போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங்) ஆகியவையே அவை.
இசைப்போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடவும், இசைக்கவும் வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களுக்குத் தேவையான இசைக் கருவிகளை அவர்களே கொண்டுவர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே, ரூ3,000, ரூ.2000, ரூ.1000 என வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
மேலும், அரசு இசைப்பள்ளி சார்பில் வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்வில், இசைப் பேட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியையை 94425-72948 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.