மதுராந்தகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிக்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளிக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலரை தரக்குறைவாக பேசிய துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேனியர்மேடு பகுதியைச் சேர்ந்த இருளர் இன மாற்றுத் திறனாளிகள் அமரேசன், ராஜி ஆகியோருக்கு அரசு உதவித் தொகை பெற்றுத்தரக் கோரி மதுராந்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் கே.வாசுதேவன் தலைமையில் அக்கட்சியினர் அண்மையில் நகர வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.
அப்போது அவர்களிடம் சமூக நலத்துறை துணை வட்டாட்சியர் பர்வதம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுராந்தகம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அக்கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களையும் கட்சிப் பிரமுகர்களையும் அவமரியாதையுடன் பேசும் சமூக நலத்துறை துணை வட்டாட்சியர் பர்வதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுராந்தகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்டச் செயலர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், எஸ்.ராஜா, பொன்னுசாமி, நாகேஷ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.