கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவன வளாகத்தில் ஸ்ரீசக்ரமும், ஞானலிங்கமும் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திங்கள்கிழமை காலை பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுளர் சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பிருந்தாவன வளாகத்தில் சுமார் 7.4 அங்குலம் உயரம் கொண்ட மிக பிரமாண்டமான ஞானலிங்கத்தையும், ஸ்ரீசக்ரத்தையும் பீடாதிபதி ரகோத்தம சுவாமி பிரதிஷ்டை செய்து, பூஜைகளை நடத்தினார். ஞானலிங்கத்தையும், அருகில் 4 அடி 2 அங்குலம் உள்ள நந்தி பகவானையும் பக்தர்கள் வணங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் வந்து லிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து, பீடாதிபதி ரகோத்தம சுவாமியிடம் அருளாசி பெற்றனர். அதைத் தொடர்ந்து சத்யநாராயண பூஜை, மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாலசந்திரன், மாசாணமுத்து, தொழிலதிபர் எஸ்.எஸ்.அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.