அத்திவரதர் பெருவிழாவையொட்டி வெளியூர் பயணிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என எம்.பி.செல்வம், ரயில்வே வாரியத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இது தொடர்பா அவர், தில்லியில் ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: திருமால்பூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு கூடுதல் வசதியுடன் இடமளிக்க வேண்டும். அத்துடன், கூடுதல் பெட்டிகளும் இணைக்க வேண்டும்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு வெளிமாநில, மாவட்டப் பயணிகள் பயன்பெறும் வகையில் அரக்கோணம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களிலிருந்து இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்வழித் தடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சிக்கி உயிரிழக்கின்றன. இதைத் தவிர்க்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.