மதுராந்தகம் வருவாய் உட்கோட்டப்பகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண நடைபெற்று வந்த ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. வருவாய் தீர்ப்பாய அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜெயசித்ரா, துணை வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் மதுராந்தகம் வருவாய்த் துறைக்கு உட்பட்ட 120-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை அளித்தனர்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் இந்த மாதம் 18-ஆம் தேதி வரை 2,518 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 315 மனுக்கள் ஏற்கப்பட்டன. 108 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்ற 2,095 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன.
நிறைவு நாளான 18-ஆம் தேதி, 273 பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 200 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.