திருக்கழுகுன்றத்தை அடுத்த புன்னப்பட்டு கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் பஜனை கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 20) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
புன்னப்பட்டு கிராமத்தில் நூறாண்டு தொன்மை வாய்ந்த இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, இக்கோயிலில் வரும் 20-ஆம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இதையொட்டி புதன்கிழமை காலையில் ஆசார்யவர்ணம், மிருதசங்கிரணம், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், கலாகர்ஷணம், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் பஞ்சசூக்த ஹோமம், பூர்ணாஹுதி, 8.30 மணிக்கு மேல் கும்பக் கலசப் புறப்பாடு நடைபெறும்.
காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும். அதன் பின் 10 மணிமுதல் 1 மணி வரை கடக லக்னத்தில் அலமேலு மங்கைத் தாயார், வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இரவு பஜனைக் குழுவினரின் பஜனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை புன்னப்பட்டு கிராமத்தினர் செய்து வருகின்றனர்.