ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கடைகளில் இருந்த சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதும், உற்பத்தி செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர். இதில், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கும் ரூ.8,500 அபராதம் விதிக்கப்பட்டு, 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.