மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் வாரம் ஒரு நாள் யோகாசனப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பயிற்றுவிக்கும் யோகாசனப் பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. பள்ளி வளாகத்தில் இப்பயிற்சியை தலைமை ஆசிரியர் சேரன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் பத்மாசனம், பருவதாசனம், வஜ்ராசனம், பாதஹஸ்த ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
அவர்களுக்கு யோகாசனப் பயிற்றுநர்கள் லிவிங்ஸ்டன், சேகர், துரைராஜ் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.