குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஒரத்தூர் கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த பாழடைந்த கிணற்றை சீரமைத்து அதன் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் அளவு குறைந்ததாலும், நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. இதனால் கிராமப் பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, ஊராட்சிக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோயில் தெருவில் கடந்த 20 ஆண்டுளாக தூர்வாரப்படாமல் பாழடைந்து காணப்பட்ட கிணற்றை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கற்பகம் சுந்தர் தலைமையில் கிராம மக்கள் தூர்வாரி சீரமைத்தனர்.
இதையடுத்து இந்தக் கிணற்று நீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.