அத்திவரதர் பெருவிழாவையொட்டி, உள்ளூர்வாசிகளான 4 சக்கர வாகன உரிமையாளர்களுக்கு புதன்கிழமை 1,800 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வருவோர் தங்களது 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறவேண்டும்.
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வெளியூர் பேருந்துகள், 4 சக்கர வாகனங்களுக்கு நகர்ப்பகுதியில் அனுமதியில்லை. இதற்காக, 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூர் வாசிகள் கார் வைத்திருந்தால் அவர்கள் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு நகர்ப்பகுதியில் பயணிக்கலாம். ஆனால், உரிய வாகன நிறுத்தப்பகுதியில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பகுதி கார் உரிமையாளர்களுக்கு நகர்ப்பகுதிக்குள் சென்று வர அனுமதிச் சீட்டு புதன்கிழமை முதல் மாவட்ட காவலர் மைதானத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, ஆதார் அட்டை, வாகனப் பதிவுச் சான்று, காப்பீட்டு நகலுடன், ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, முதல் நாளில் மட்டும் 1,800 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள் வைத்திருப்போருக்கு இந்த அனுமதிச் சான்று வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.