கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் வியாழக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம்,நோய் தடுப்புத்துறை சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மருத்துவமனையில் சட்டப்பேரவைத் தொகுதி நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பார்வையிட்டார். அதில், இயந்திரத்துக்கு உரிய நீரை விநியோகம் செய்யாதது தெரியவந்தது.
தொடர்ந்து, குடிநீர் இயந்திரத்துக்கு உரிய நீரினை விநியோகம் செய்து விரைந்து நோயாளிகளுக்கு குடிநீர் வழங்க எம்எல்ஏ அறிவுறுத்தினார். பின்னர், கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர் வழங்கினார்.
பின்னர், எம்எல்ஏ எழிலரசன் கூறியது: மருத்துவமனையில் குடிநீர் இல்லை என புகார்கள் வந்தன. அதன்பேரில், மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6.50 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர் இயந்திரத்துக்கு முறையாக நீரை விநியோகம் செய்யவில்லை. இதனால், குடிநீரின்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இயந்திரமும் கோளாறு ஆகும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன் என்றார் எம்எல்ஏ எழிலரசன்.