சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பெற்றோர் வெள்ளிக்கிழமை இரவு புகார் அளித்தனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாயகம்-சிமியோன் ஆகியோர் மனுவில் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியலூர்-அத்தியூர் அண்ணாநகரில் வசித்து வருகிறோம். எங்களின் 9 வயது மகன் ரிச்சி-க்கு இதயத்தில் ஓட்டை உள்ளதாக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையொன்றில் மருத்துவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எனது மகனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன்.
அதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், எனது மகனின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, அவனுக்கு தொடர்ந்து சிறுநீர், மலம் நிற்காமல் வந்தவாறு உள்ளது.
மேலும், இடுப்புக்கு கீழ் எவ்வித செயல்பாடும் இல்லாமல், படுத்த படுக்கையாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிகிச்சை அளித்த மருத்துவர்களை அணுகி கேட்டோம். அதற்கு, அவர்கள் ஏதோ ஒரு சில நபர்களுக்கு தவறுதலாக நடைபெறுவது சகஜம்தான் என பதில் அளித்தனர். இதனால், மிகுந்த மன வேதனை அடைந்தோம். அத்துடன், எனது மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தவறான சிகிச்சை அளித்ததோடு, அலட்சியமாகவும் பேசிய மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.