மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலை முன்னிட்டு பண நடமாட்டத்தை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது. இந்நிலையில் திருக்கழுகுன்றம்-மதுராந்தகம் நெடுஞ்சாலையில் பர்வதம் தலைமையில் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கழுகுன்றத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி அதிவேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் மாலதி உத்தரவின்பேரில் பறக்கும் படைத் தலைவர் பர்வதம் படாளம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்காவை கைப்பற்றியதுடன் ஓட்டுநர் யோகானந்திடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.