ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருக்கான அலுவலகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி 26-இல் நிறைவடைகிறது. இந்நிலையில், தேர்தல் அலுவலர்களுக்கான அலுவலகங்களைத் தயார்படுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நில ஆவண மேலாண்மை மையத்தின் ஒரு பகுதியை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருக்கான அலுவலகமாகத் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அலுவலகத்தில், வேட்பாளர்கள் "டெபாசிட்' தொகை செலுத்துமிடம், இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கும் இடம், வேட்பு மனு தாக்கல் செய்யுமிடம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் சொத்து விவரங்களை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், அறிவிப்புப் பலகை தயாரிக்கப்பட்டு, வட்டாட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.