தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிக்க வேண்டும் என மண்டல அலுவலர்களிடம் ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, மின்னணு வாக்காளர் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட 139 மண்டல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடிகளின் அருகில் அரசியல் கட்சி, வேட்பாளர்களின் விளம்பரங்கள், அவர்களைச் சார்ந்த எந்தவொரு விளம்பரத் தட்டிகளும் இல்லாதவாறு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களைப் பதிவு செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் முறையாக அனுமதி பெறாமல் நடைபெறும் எந்தவொரு தனியார் நிகழ்ச்சியாக இருந்தாலும் காவல் துறைக்கும், வட்டாட்சியருக்கும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தளவாடப் பொருள்களை முறையாக எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் பணிகள் அமைதியாகவும், சுமூகமாகவும் நடக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தாம்பரம் சேலையூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்காளர் இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஸ்ரீதர், காவல்துறை அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.