செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக பெண்ணுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், அரசாணி மங்களம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி ரஞ்சிதா பிரசவத்துக்காக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி சுயநினைவின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரஞ்சிதா சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் மூளையில் ரத்தம் உறைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அதில் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சுதாகர், மகப்பேறு துறைத் தலைவர் வனிதா, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சுரேஷ்பாபு, மயக்கவியல் துறைத் தலைவர் மாலா, நரம்பியல் துறைத் தலைவர் நர்மதா பாலாஜி, கந்தன்கருணை உள்ளிட்டோர் ரஞ்சிதாவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம் கூறியது: அறுவை சிகிச்சை பிரசவத்தின்போது மூளையில் ரத்த உறைவு ஏற்படும். இதன் காரணமாக பெண்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொதுவாக மருந்துகள் மூலமே இந்த பாதிப்புகள் சரிசெய்யப்படும்.
பிரசவத்துக்குப் பின் பெண்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.
தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் நலமுடன் உள்ளார் என்றார்.