காரப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனை: அதிகரித்து வரும் நோயாளிகள் 

காரப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
காரப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனை: அதிகரித்து வரும் நோயாளிகள் 


காரப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில் தமிழகத்திலேயே புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக அறிஞர் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. 
இம்மருத்துவமனை அண்ணாவின் நினைவாக உலக சுகாதார நிறுவன உதவியுடன் கடந்த 1969 முதல் செயல்பட்டு வருகிறது. முன்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் கிராமந்தோறும் சென்று புற்று நோயைக் கண்டறியும் முகாம்களை நடத்தி வந்தனர். தற்போது, கதிர்வீச்சு மருத்துவம், அறுவை சிகிச்சை, வேதியியல் மருத்துவம், ஆராய்ச்சி என புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் இந்த மருத்துவமனை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆண்டுக்கு 25 ஆயிரம் நோயாளிகள்: இம்மருத்துவமனைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 
உள்நோயாளிகளாக ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 290 படுக்கை வசதிகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 
மறுவாழ்வுத் திட்டம்: இங்கு புற்றுநோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், நோயாளிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முகாம்கள் அமைத்து, கூடை பின்னுதல், சுயதொழில் ஆலோசனைகள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அவர்களை கவலையிலிருந்து மீட்கவும் வாரந்தோறும் யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
இதுகுறித்து புற்றுநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியது: தமிழகத்திலேயே இம்மருத்துவமனையில்தான் புற்றுநோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான். 
நோயாளிகளின் வருகை 15 சதவீதம் உயர்வு: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவதும், அதிகரிப்பதுமாக மாறி மாறி இருந்து வந்தது. இங்கு ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இப்போது, ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இது 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாகும். அதிலும், பெரும்பாலானோர் புற்றுநோய் பாதிப்பு மிகவும் முற்றிய நிலையிலேயே வருகின்றனர். இதனால், நோயாளிகளை நூறு சதவீதம் குணப்படுத்த முடிவதில்லை. ஆரம்ப நிலையில் வந்தால் நூறு சதவீதம் குணப்படுத்த இயலும். 
ஆண்டுதோறும் புற்றுநோய் அதிகரிப்பதற்குக் காரணம், நோயின் அறிகுறியை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாததுதான். புற்றுநோய் பாதிப்புக்கு குறிப்பாக, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது, கருகிய, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொள்வது, நேரத்துக்கு உறங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. 
இலவசப் பரிசோதனை: 30 முதல் 40 வயதானோர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இம்மருத்துவமனையில் இலவச ஆரம்ப நிலைப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அத்துடன், காப்பீட்டுத் திட்டத்திலும் புற்றுநோய்க்கான உயர் சிகிச்சைகளை இந்த மருத்துவமனையில் பெறமுடியும். இங்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு சார்பில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக மாற்றும் திட்டமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆரம்ப நிலை சிகிச்சை அவசியம் 
முன்பெல்லாம் புற்றுநோய் என்பது சுமார் 60 வயதுக்கு மேல்தான் வந்தது. ஆனால், தற்போது 30 வயது முதலே புற்றுநோயின் தாக்கத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு, இளைஞர்களின் உணவுப் பழக்க வழக்க முறையே காரணம். அதிலும், புகைப் பிடிப்பது, அதிக நேரம் கண்விழிப்பது, முறையான உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதனால், புற்றுநோய்த் தாக்கமும் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு, சர்க்கரை நோய் பட்டியலில் தற்போது புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது கவலைக்குரியது. 
உடலில் ஏதேனும் கட்டி ஏற்படுவது, மூக்கு, காது துவாரங்களில் ரத்தக் கசிவு, இருமலில் ரத்தம் கலந்து வருவது, தொடர் காய்ச்சல், ஆறாத புண், தொடர்ந்து உடல் சோர்வு, மலக்குடல்ஆசனவாயில் ரத்தக்கசிவு, பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு, குரல் உடைந்து மங்குதல் உள்ளிட்டவை புற்றுநோயின் அறிகுறிகள்.  
இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ளவேண்டும். இதன்மூலம், தொடக்க காலத்திலேயே புற்று நோயின் தன்மையை அறிந்து, எளிய முறையில் சிகிச்சை பெற்று குணமடைய முடியும். இளைஞர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வோடு, தங்களது உணவுப் பழக்கத்தை நன்முறையில் ஒழுங்குபடுத்தி, ஒழுக்க நெறியோடு வாழ்வதன் மூலம் புற்றுநோயின்றி வாழலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com