செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் பகுதியில் குடும்பத் தகராறில் மனமுடைந்த மனைவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் கிராமம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசூர்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கணவர் செல்வநாயகம் வெளியே சென்றபின், ஜெயசூர்யா மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அருகில் உள்ளவர்கள் செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்துவடிவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.