ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் ஃபோம் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில், அட்டைக் கழிவுகள் இருந்த கிடங்கில் புதன்கிழமை திடீரென தீ பற்றியது.
இதைக் கண்ட தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.