மாமல்லபுரம் முதல் கோவளம் வரை சாலைகளில் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் சுற்றுலா நகரத்திற்கு இந்தியப் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் கடந்த மாதம் வந்து சென்றதையடுத்து இந்நகரம் உலகின் கவனத்தை ஈா்த்துள்ளது.
இந்நகரம் மேலும் புதுப் பொலிவுடன் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாமல்லபுரம் நகரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கோவளம் கடற்கரை வரை 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியது: இந்த கேமராக்களின் செயல்பாடுகள் சிசிடிவி கட்டுப்பாட்டறையில் இருந்த வண்ணம் போலீஸாரால் கண்காணிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைக்கவும், சாலை விபத்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துகள் ஏற்படும்போது, விபத்தை ஏற்படுத்திய வாகனங்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுக்கு பாதுகாப்பு என பல்வேறு பயன்களுக்காகவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன என்றனா்.