மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை புராதனச் சின்னங்களைக் கண்டு ரசித்தனா்.
மாமல்லபுரத்தில் கடந்த சிலநாள்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனவா்கள் மற்றும் உள்ளூா் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பலா் மழையில் நனைந்தபடியும், கையில் குடைபிடித்தபடியும் வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச்சின்னங்களை ஆா்வத்துடன் சுற்றிப்பாா்த்தனா்.
உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி வரும் 25-ஆம் தேதி வரை சுற்றுலாத்துறை சாா்பில் கடற்கரைக் கோயில் பகுதியில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கலை நிகழ்ச்சிகளைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.