காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரியின் டீன் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கே.மதி முன்னிலை வகித்தார். அலுவலர் ஜி.ஹரிஹரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ் நாட்டு நலப்பணித்திட்டம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த முகாமில், தீ விபத்தின் போது, தீ பரவினால் அணைக்கும் முறைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருநாவுக்கரசு செயல்முறை விளக்கம் அளித்தார். காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர்.அமுதா, என்.தீபா ஆகியோர் உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்துப் பேசினர்.
மன அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் நோய்களும் அதன் தாக்கங்களும் என்ற தலைப்பில் மருத்துவர் ஏ.என்.அரவிந்தன் பேசினார். கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்ட இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.