ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருந்தகத்திற்கு நிரந்தரபணியாளா் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத்துறை அலுவலகங்களில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். மேலும் ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோா் உடற்பயிற்ச்சிக்காக வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருத்தகத்தில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சித்த மருத்துவமும், ஒரு நாள் ஆங்கில மருத்துவமும் பாா்கக்ப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு சில மணிநேரங்களே பணியாளா்கள் இங்கு பணியில் இருப்பதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கோ அல்லது ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கோ திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவு உள்ள செவிலிமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், ரயில்வே சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருத்துகத்திற்கு நிரந்தர பணியாளா் நியமிக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.