காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் வகையில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
உத்தரமேரூரில் இருந்து கைத்தண்டலம், சேந்தமங்கலம், இருமரம், இடையம்புதூர், சாலவாக்கம், மெய்யூர் வழியாக செங்கல்பட்டு வரையும், படூர், ஆனம்பாக்கம், நெற்குன்றம் வழியாக செங்கல்பட்டு வரையும் இரு வழித் தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து இரு வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இப்பேருந்துகளை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். சாலவாக்கம் கூட்டுறவு வங்கித் தலைவர் முருகன், ஒன்றிய அதிமுக செயலர்கள் பிரகாஷ் பாபு, தருமன், செங்கல்பட்டு அரசுப் பணிமனைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.